நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதியின்றி ‘சந்திரமுகி’ படக் காட்சிகள்: பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

0

நடிகை நயன்தாரா குறித்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சந்திரமுகி’ திரைப்படக் காட்சிகளை நீக்க வேண்டுமென கோரிய மனுவை எதிர்நோக்கி பதிலளிக்க, டார்க் ஸ்டூடியோ மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நயன்தாராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தை டார்க் ஸ்டூடியோ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படம், 2024ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில், நடிகர் தனுஷ் நடித்த ‘நானும் ரவுடி தான்’ படத்திலிருந்து, வொண்டர்பார் பட நிறுவனம் முன்னே அனுமதி அளிக்காமல் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரியும், அந்த நிறுவனத்தின் உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், நடிகர் தனுஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நயன்தாரா ஆவணப்படத்தில் ‘சந்திரமுகி’ படத்திலிருந்து அனுமதி இன்றி காட்சிகள் இடம்பெற்றுள்ளனவென குற்றம்சாட்டி, அந்த படத்தின் பதிப்புரிமை வைத்திருக்கும் ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “சந்திரமுகி” திரைப்படக் காட்சிகளை ஆவணப்படத்திலிருந்து நீக்க வேண்டும், மேலும் இழப்பீடாக ரூ.5 கோடி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும், உரிமம் இல்லாத காட்சிகளை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “சந்திரமுகி” படக் காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற தடை விதிக்க வேண்டும், தற்போது உள்ள காட்சிகளை அகற்ற வேண்டும், இதன் மூலம் கிடைத்த வருவாய் மற்றும் லாபங்களை குறித்த கணக்குகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்” என்றும் அந்த மனுவில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இந்த மனுவுக்கு இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று டார்க் ஸ்டூடியோ மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Facebook Comments Box