அரசுத் துறைகளின் தகவல்களை விரைவாகவும் தெளிவாகவும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் செய்தித் தொடர்பாளர்களாக நியமனம்
தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டங்கள், பொதுப் பயன்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய தகவல்களை, செய்தி ஊடகங்களின் வழியாக, பொதுமக்களுக்கு துல்லியமாகவும், நேர்மையாகவும் விரைந்து எடுத்துச் செல்லும் பொருட்டு, அரசு புதிய ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, வங்கியரசின் பல்வேறு துறைகளின் தகவல்களை ஒருங்கிணைத்து, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பிற நிர்வாக பிரிவுகளுடன் இணைந்து செயலாற்றுவதற்குமான முயற்சியாக, மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நான்கு பேர் அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள் குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, பின்வரும் மூத்த இந்திய ஆட்சிப் பணியாளர் அதிகாரிகளை, செய்தித் தொடர்பாளர்களாக நியமித்து அரசின் தகவல்களை பொது மக்களுக்கு தெளிவாகவும், நேர்த்தியான முறையிலும் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளார்:
- டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ஐஏஎஸ் – அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர்.
- ககன்தீப் சிங் பேடி, ஐஏஎஸ் – அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.
- தீரஜ் குமார், ஐஏஎஸ் – அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை.
- பெ. அமுதா, ஐஏஎஸ் – அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை.
இந்த அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் சார்ந்த செய்திகளை ஊடகங்களுக்கு தெளிவாக விளக்கும் பொறுப்பில் இருப்பார்கள். அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட துறைகள் வருமாறு:
டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ஐஏஎஸ்:
- எரிசக்தி துறை
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு
- போக்குவரத்து
- கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
- வெளிநாட்டிலுள்ள தமிழர்களின் நலன்
- பள்ளிக் கல்வி
- உயர்கல்வி
- கைத்தறி, துணிநூல், கதர்துறை
- மனிதவள மேலாண்மை
ககன்தீப் சிங் பேடி, ஐஏஎஸ்:
- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்
- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- கால்நடை, பால்வளம், மீன்வளம்
- வேளாண்மை மற்றும் உழவர் நலன்
- நீர்வளத் துறை
- சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை
- குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்
- தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு
- இயற்கை வளங்கள்
தீரஜ் குமார், ஐஏஎஸ்:
- உள்துறை
- மதுவிலக்கு
- ஆயத்தீர்வைத் துறை
பெ. அமுதா, ஐஏஎஸ்:
- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள்
- மாற்றுத் திறனாளிகள் நலன்
- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்
- பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன்
- வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி
- நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்
- சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையங்கள்
- சிறப்புத் திட்டச் செயலாக்கம்
இத்தகைய செய்தித் தொடர்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் செயலாளர்கள், துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள், சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த தகவல்களை முறையாக வழங்குவர். அச்செய்திகளை சரிபார்த்து, உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்ட பிறகு, தலைமைச் செயலாளர் ஆலோசனையின் அடிப்படையில், செய்தித் தொடர்பாளர்கள் ஊடகங்கள் முன் அறிக்கைகளை வெளியிடுவார்கள்.
இந்த புதிய அமைப்பு மூலம், அரசின் திட்டங்கள் மற்றும் தகவல்கள் மிகவும் விரைவாகவும், துல்லியமான முறையிலும் மக்களிடம் கொண்டு செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.